காஷ்மீர் சிறுமியின் இதயத்தை தொட்ட ஸ்மிருதி.. சாதனை படைத்த கையோடு, இன்ஸ்டாவில் போட்ட பதில்
விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, காஷ்மீர் சிறுமியின் நெஞ்சைத் தொட்ட செய்தி மூலம் பலரது மனதையும் கவர்ந்தார். இயக்குநர் கபீர் கான் தனது காஷ்மீர் பயணப் புகைப்படங்களைப் பகிர்ந்தபோது, அரு பள்ளத்தாக்கில் சந்தித்த ஒரு சிறுமி, ஸ்மிருதி மந்தனாவை தனக்கு பிடித்த கிரிக்கெட் வீராங்கனையாகக் குறிப்பிட்டிருந்தார்.
காஷ்மீருக்குச் சென்றிருந்த திரைப்பட இயக்குநர் கபீர் கான் தனது சமூக வலைத்தளப் பதிவில், "அரு (Aru) பகுதியில், ஸ்மிருதி மந்தனா எனக்கு பிடித்த கிரிக்கெட் வீராங்கனை என்று சொல்லச் சொன்ன ஒரு சிறுமியை சந்தித்தேன். ஸ்மிருதி இந்தப் பதிவைப் பார்ப்பார் என நம்புகிறேன். மேலும், மைதானத்தின் எல்லையாக மலை ஓடையைக் கொண்ட சிறுவர்களை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அங்கு சிக்ஸ் அடித்தால் பந்து பள்ளத்தாக்கின் வழியாக ஜேலம் நதிக்குள் பாய்ந்துவிடும்." என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் ஸ்மிருதி மந்தனா, கபீர் கானின் இந்தப் பதிவுக்கு, "அருவில் இருக்கும் அந்தச் சின்னப் புலிக்கு எனது பெரிய Hug கொடுத்து, நானும் அவளுக்கு உற்சாகமூட்டுகிறேன் என்று சொல்லுங்கள்!" என்று அன்பான செய்தியுடன் பதிலளித்தார். அவரது இந்த எளிய பதில் ரசிகர்களை மகிழ்வித்ததுடன், அவருடைய பணிவான இயல்பையும் காட்டியது.
இதனையடுத்து, ஸ்மிருதி மந்தனா கிரிக்கெட் களத்தில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார். விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஸ்ரீலங்காவுக்கு எதிரான முதலாவது மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில், அவர் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீராங்கனை மந்தனா ஆவார். நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் 4,716 ரன்களுடன் பட்டியலில் முதலிடத்திலுள்ளார். மந்தனா தனது 4,000 ரன்களை வெறும் 3,227 பந்துகளில் எட்டியுள்ளார், இது சுசி பேட்ஸின் 3,675 பந்துகளை விட குறைவு.
இப்போட்டியில், 122 ரன்கள் இலக்கை விரட்டிய மந்தனா, 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்தியா இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. குறைவான ரன்களே எடுத்திருந்தாலும், வரலாற்றுச் சாதனைக்கு அது வழிவகுத்தது. கடந்த மாதம் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு மந்தனா விளையாடிய முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.இதற்கு முன்னதாக, இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இலங்கை அணியை 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களில் கட்டுப்படுத்தினார்கள். 2வது டி20 போட்டி செவ்வாய்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications