டெல்லி: இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டியில் ஏற்கனவே அதிவேக அரைசதம் அடித்து சாதனை புரிந்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, மற்றொரு ஆட்டத்தில் சதமடித்தார். இதன் மூலம் பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ்க்கு பிறகு சதமடித்த இரண்டாவது வீராங்கனையானார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா, இங்கிலாந்தில் நடக்கும் பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாடுகிறார்.
லோக்பரோக் லைட்னிங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து மிகவும் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த நியூசிலாந்தின் சோபி டிவைனின் சாதனையை அவர் சமன் செய்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த லான்காஷையர் தண்டர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 61 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார் ஸ்மிருதி.
இதன் மூலம் பெண்கள் டி-20 போட்டிகளில் சதமடித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். பெண்கள் டி-20 போட்டிகளில் சதமடித்த முதல் வீராங்கனை இந்தியாவின் மிதாலி ராஜ்.
நேற்றைய ஆட்டத்தில் லான்காஷையர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. மந்தனாவின் அதிரடி சதத்தால் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.