டெல்லி: பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் அரை சதமடித்த சாதனையை சமன் செய்தார் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா. அவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா, இங்கிலாந்தில் நடக்கும் கே.ஐ.ஏ. சூப்பர் லீக் போட்டியில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாடுகிறார்.

இங்கிலாந்தில் நடக்கும் மகளிர் டி-20 போட்டியில் பங்கேற்கும் முதல் வீராங்கனையான ஸ்மிருதி, லோக்பரோக் லைட்னிங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து தூள் கிளப்பினார்.
இதன் மூலம் மிகவும் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த நியூசிலாந்தின் சோபி டிவைனின் சாதனையை அவர் சமன் செய்தார்.
மழையால் 6 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணி 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தானா 19 பந்துகளில் 52 ரன்களும், ப்ரீஸ்ட் 25 ரன்களும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய லோக்பரோக் லைட்னிங் அணி 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணி வென்றது.
2015ல் இந்தியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் 18 பந்துகளில் அரை சதம் அடித்தார் நியூசிலாந்தின் சோபி டிவைன். நேற்றைய ஆட்டத்தில் அவர் லோக்பரோக் லைட்னிங் அணிக்காக விளையாடி ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார்.
22 வயதாகும் ஸ்மிருதி மந்தானா 42 டி-20 போட்டிகளில் 857 ரன்கள் எடுத்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசினார்.
ஆண்கள் டி-20 போட்டிகளில் 12 பந்துகளில் அரை சதம் அடித்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயிலுடன் பகிர்ந்து கொள்கிறார் இந்தியாவின் யுவராஜ் சிங்.