ஜெய்பூர்: மகளிருக்கான டி 20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில், டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மகளிர் ஐபிஎல் போட்டிக்கு முன்னோட்டமாக முதல் முறையாக இத்தொடர் தொடங்கப் பட்டுள்ளது. டிரெய்ல்பிளாசர்ஸ், சூப்பர் நோவாஸ், வெலாசிட்டி என 3 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

போட்டியில் டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய டிரெய்ல்பிளாசர்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 67 பந்துகளில் 90 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.
பின்னர், இலக்கை துரத்திய சூப்பர்நோவாஸ் அணி, சீராக ரன்களை சேர்த்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கோஸ்வாமி வீசிய அந்த ஓவரை, ஹர்மன்பிரீத் கவுர் எதிர்கொண்டார்.
அவர், 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை. மைதானத்தில் பரபரப்பு நிலவியது. தஹுஹு ரன் அவுட் ஆனதால், சூப்பர்நோவாஸ் அணி எதிர்பாராத விதமாக தோல்வியுற்றது. ஆட்ட நாயகியாக ஸ்மிரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த போட்டி 8ம் தேதி டிரெய்ல்பிளாசர்ஸ், வெலாசிட்டி அணிகளுக்கு இடையே நடக்கிறது.