மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திருமணம் நின்றதற்கான காரணம் குறித்தும், பலாஷ் முச்சல் குறித்தும் ஸ்மிருதி மந்தனாவின் பால்ய நண்பர் வித்னியன் மானே என்பவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவின் நண்பர் வித்னியன் மானே அளித்த பேட்டியில், திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். "கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமண நிகழ்ச்சிகள் நடந்தபோது, பலாஷ் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கையும் களவுமாகப் பிடித்தோம்" என்று அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் ஆத்திரமடைந்து பலாஷ் முச்சலைத் தாக்கியதாகவும் வித்னியன் மானே தெரிவித்துள்ளார். அந்தச் சூழல் மிகவும் மோசமாக இருந்ததாகவும், பலாஷ் முச்சல் தனது நற்பெயரைக் கெடுத்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மிருதி மந்தனாவின் குடும்பத்தினர் மூலமாகவே தனக்குப் பலாஷ் அறிமுகமானதாகக் கூறும் வித்னியன் மானே, பண மோசடி புகாரையும் முன்வைத்துள்ளார். பலாஷ் முச்சல் தன்னிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டதாக அவர் சாங்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்படம் எடுப்பதாகக் கூறி தன்னிடம் பணம் வாங்கியதாகவும், பின்னர் கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் நின்ற பிறகு, பலாஷின் குடும்பத்தினர் தன்னைத் தொடர்பு கொள்ள முடியாதவாறு பிளாக் செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தன்னிடம் இதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும், அதனைப் காவல்துறையிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பலாஷ் முச்சல் மறுப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், "வித்னியன் மானே கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை. எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவை பரப்பப்படுகின்றன. இது தொடர்பாக எனது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.