மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது திருமணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பாலச் முச்சால் உடனான திருமணத்தை அவர் ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். இவர்கள் இருவரும் 2025 நவம்பர் 23 அன்று திருமணம் செய்து கொள்ளவிருந்தனர்.
ஆனால் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சில நாட்களிலேயே அமைதியாக இருந்த ஸ்மிருதி மந்தனா தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், தான் முன்னோக்கி சென்று கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், இரு குடும்பங்களுக்கும் தங்களது பிரைவசியை மதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏராளமான ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த நேரத்தில் நான் பேச வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன். நான் மிகவும் தனிப்பட்ட வாழ்க்கை வாழ்பவள்."
"அதைத் தொடரவும் விரும்புகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்கிறேன். திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டுகிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனிமையையும் மதியுங்கள்."
"எங்களுக்கு நாங்களே புரிந்துகொண்டு முன்னேற தேவையான இடைவெளியைத் தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.எல்லோரையும் ஒரு உயர்ந்த நோக்கம் வழிநடத்தும். எனக்கு அந்த உயர்ந்த நோக்கம் எப்போதும் இந்தியாவுக்காக உயரிய மட்டத்தில் விளையாடுவதே."
"இந்தியாவுக்காக முடிந்தவரை நீண்ட்காலம் விளையாடி கோப்பைகளை வென்று தர வேண்டும் என்பதே என் இலக்கு. அதில்தான் என்றென்றும் என் கவனம் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. இனி முன்னோக்கி நகர வேண்டிய நேரம் இது," என்று அவர் தெரிவித்துள்ளார்.