மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதற்கு, அவரது தந்தையின் உடல்நிலை மட்டுமே காரணமல்ல, வருங்கால கணவர் பலாஷ் முச்சலின் 'துரோகம்'தான் உண்மையான காரணம் என வெளியாகும் தகவல்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' தற்போது பரவி வருகின்றன.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்த நிலையில், சங்கீத் நிகழ்ச்சியின்போது ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டதால், திருமணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாகப் பலாஷின் சகோதரி பாலக் முச்சல் அறிவித்த சிறிது நேரத்திலேயே, இணையத்தில் சில ஸ்கிரீன்ஷாட்கள் தீயாய்ப் பரவத் தொடங்கின. மேரி டி'கோஸ்டா (Mary D'Costa) என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பலாஷ் முச்சலுடன் செய்த இரகசிய சாட்டிங்கை பகிர்ந்தார்.
அந்தச் சாட்டிங்கில், ஸ்மிருதி மந்தனாவுடனான உறவு ஒரு 'தொலைதூரக் காதல்' என்றும், அவர் எப்போதும் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும் பலாஷ் கூறியதுபோல உள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் அழகை வர்ணித்தும், அதிகாலை 5 மணிக்கு மும்பை வெர்சோவா கடற்கரைக்கு வரச் சொல்லியும், நீச்சல் மற்றும் ஸ்பாவிற்கு செல்லலாம் என்றும் பலாஷ் அழைப்பு விடுத்ததுபோல அந்த ஸ்கிரீன்ஷாட்டில் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, "நீங்கள் ஸ்மிருதியை காதலிக்கிறீர்களா?" என்று அந்தப் பெண் கேட்ட கேள்விக்கு, "லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்", "திரைப்பட வேலையில் 3 மாதம் பிஸியாக இருந்தேன்" என பலாஷ் மழுப்பலாகப் பதிலளித்து அந்தத் பேச்சை மாற்றியதும் அதில் இடம் பெற்றுள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். பலாஷ் முச்சல், ஸ்மிருதியை மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு அழைத்துச் சென்று, மண்டியிட்டு சினிமா பாணியில் காதலைச் சொன்ன வீடியோ மற்றும் புகைப்படங்களை ஸ்மிருதி தற்போது நீக்கிவிட்டார்.
நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ளன. தந்தையின் உடல்நிலைக்காகத் திருமணம் தள்ளிப்போனது என்றால், கொண்டாட்டப் புகைப்படங்களை ஏன் நீக்க வேண்டும்? என்ற கேள்விதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட்கள் உண்மையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், 'ரெட்டிட்' போன்ற சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. திருமணக் கொண்டாட்டங்களின்போது, அங்கே இருந்த ஒரு பெண் நடன இயக்குனருடன் பலாஷ் முச்சல் நெருக்கமாக இருந்ததாகவும், அதுதான் பிரச்சனைக்கு உண்மையான காரணம் என்றும் சில வதந்திகள் உலா வருகின்றன.
"உலகக் கோப்பையை வென்று தந்த ஒரு வீராங்கனைக்கு இப்படி ஒரு நிலைமையா?" என்று ரசிகர்கள் பலாஷ் முச்சலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தந்தையின் உடல்நிலை ஒருபுறம், காதலர் மீதான சர்ச்சை மறுபுறம் என ஸ்மிருதி மந்தனா கடும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்டவர்கள் வாய்திறந்தால் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும்.