மும்பை: தனது நீண்ட கால காதலரான பலாஷ் முச்சலுடனான நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதாக அறிவித்த சில நாட்களிலேயே, இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் குறித்து ரசிகர்கள் பல்வேறு ஊகங்களை வெளியிட்டு விவாதித்து வருகின்றனர். அவர் தான் அமைதியாக இருக்க என்ன காரணம் என்பதையே குறிப்பிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் ஆகியோரின் திருமணம் நவம்பர் 23-ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தை மற்றும் மாப்பிள்ளை பலாஷ் ஆகியோருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாகத் திருமணம் நின்றதாக கூறப்பட்டது.

ஆனால், உண்மையில் திருமணம் நின்று விட்டதாக அப்போதே சலசலப்பு எழுந்தது. சில நாட்கள் வரை இரு தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், சில சர்ச்சைகளுக்குப் பிறகு, திருமணம் நிறுத்தப்பட்டதாக ஸ்மிருதி மந்தனா உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்மார்ட்போன் விளம்பரத்திற்காகப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கொடுத்துள்ள தலைப்பு தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
"என்னைப் பொறுத்தவரை, அமைதி என்பது மௌனம் அல்ல - அது கட்டுப்பாடு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு விளம்பரப் பதிவுதான் என்றாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு, அவர் தன்னை எப்படித் தேற்றிக்கொண்டு வருகிறார் என்பதையும், தான் ஏன் திருமண விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறேன் என்பதையும் இந்த வரிகள் உணர்த்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து வைரலானது.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் வைத்து பலாஷ் முச்சல் காதலை வெளிப்படுத்த, கோலாகலமாகத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் திருமணத்தன்று ஸ்மிருதியின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பலாஷ் முச்சலும் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தார்.
இதற்கிடையில், பலாஷ் முச்சல் மீது சில வதந்திகள் இணையத்தில் பரவின. அவர் துரோகம் செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், பலாஷ் குடும்பத்தினர் அதை முற்றிலுமாக மறுத்தனர். "என் மீது தவறான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று பலாஷ் எச்சரித்திருந்தார்.
இந்தச் சோகமான சம்பவங்களுக்குப் பிறகு, ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளங்களில் இருந்த திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். தனது தோழிக்குத் துணையாக இருக்க, இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து பாதியிலேயே நாடு திரும்பினார்.
தற்போது ஸ்மிருதி மீண்டும் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். "அமைதி என்பது கட்டுப்பாடு" என்று அவர் கூறியிருப்பது, பழைய கசப்பான நினைவுகளைக் கடந்து, தனது வாழ்க்கையையும் விளையாட்டையும் அவர் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்பதையே காட்டுவதாக அமைகிறது.