அதிக ஸ்கோர்
இதற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 289 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனை. 352 ரன்கள் என்பது உலகக் கோப்பையில் இந்திய அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர். தவான் சதம் விளாசி இந்திய அணியை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இந்தியாவின் அதிக சதம்
உலகக் கோப்பையில் இந்திய வீரர் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச்சென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் விளாசியிருந்தனர்.
முட்டுக்கட்டை
உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி சேசிங்கில் தொடர்ந்து 19 போட்டிகளில் வென்றிருந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி கண்டதன் பலனாக, 20 ஆண்டு சாதனைக்கு இந்தியா வலுவான முற்றுப்புள்ளியை வைத்து தள்ளியிருக்கிறது. மேலும், ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 11 வெற்றிகளை குவித்த ஆஸ்திரேலியாவின் சாதனைக்கும் இந்தியா முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.
விழாத பெயில்ஸ்
நேற்றைய போட்டியில் இந்திய வீரர் பும்ரா 2வது ஓவரின் முதல் பந்தை வீசும் போது வார்னரின் காலில் பட்டு ஸ்டெம்பை உரசியது. ஆனால், பெயில்ஸ் கீழே விழாததால் வார்னர் அவுட்டில் இருந்து தப்பி அரைசதம் அடித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் 5 முறை இதுபோல் நடந்துள்ளது.
தோனி அடித்த ஷாட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி அடித்த சிக்சர் ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்தது. அப்படி ஒரு வசீகரமான ஷாட்...!! அப்போது, மறு முனையில் நின்று கொண்டிருந்த கேப்டன் கோலி தன்னை மறந்து ரசித்து மகிழ்ந்தார். இந்த காட்சி கோலியும், தோனியின் ரசிகன் தான் என்பதை கிரிக்கெட் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.
பந்து சேதப்படுத்தப்பட்டதா?
ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா, பேண்ட் பாக்கெட்டிலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் துண்டுத்துணியை எடுத்து பந்தை துடைத்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தை சேதப்படுத்தி சுவிங் செய்ய இது போன்று செய்தாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ராணுவ முத்திரை இல்லை
தோனி ரன் அடித்துக் கொண்டிருக்கும் போது ரசிகர்கள் அவர் கிளவுசில் இருந்து நீக்கப்பட்ட பாலிதன் ராணுவ முத்திரையை பேனர்களாக வடிவமைத்து காட்சிப் படுத்தினர். இந்த முத்திரையை தோனி பயன்படுத்த தடைவிதிக்கலாம் ஆனால் ரசிகர்களுக்கு தடை விதிக்க முடியாது என்ற வாசகங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.
பேட்டிங் சாதனைகள்
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா, 20 ரன்கள் சேர்த்து போது, ஆஸி.க்கு எதிராக 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம், குறைந்த இன்னிங்களில் இந்த மைல் கல்லை எட்டிய 2-வது இந்தியர், 4வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார்.