மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இணைந்து இருப்பது போன்ற போலி புகைப்படம் இணையத்தில் வலம் வருகிறது.
இதை அடுத்து பலரும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீப காலமாக இது போன்ற போலி புகைப்படங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டீப் ஃபேக் (Deep Fake) என்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Interlligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆபாசமாக உடை அணிந்து இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. அதை அடுத்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் குறித்த வீடியோ ஒன்று பரவியது.
இந்த நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா ஒன்றாக நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதற்கேற்ப சுப்மன் கில் மும்பை, புனே உள்ளிட்ட ஆடுகளங்களில் ஆடும் போது மும்பையில் வசித்து வரும் சாரா அந்த போட்டிகளை காண நேரில் வருகிறார். சுப்மன் கில் அரைசதம், சதம் அடித்தால் முதல் ஆளாக எழுந்து நின்று கை தட்டுகிறார் என்றெல்லாம் வீடியோவுடன் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் நெருங்கி நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சிலர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், உண்மையில் அது சாரா டெண்டுல்கர் தனது சகோதரர் அர்ஜுன் பிறந்தநாள் அன்று அவருடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம்.
அதில் அர்ஜுன் முகத்தை மட்டும் எடுத்து விட்டு, சுப்மன் கில் முகத்தை அதில் மாற்றி வைத்து சிலர் போலி புகைப்படத்தை தயார் செய்துள்ளனர். சகோதரருடன் புகைப்படம் எடுத்தது குற்றமா? இது போன்ற சமூக விரோத செயல்களால் நிம்மதியாக போட்டோ எடுக்கவே முடியவில்லை என பலரும் இந்த போலி புகைப்படத்தை பரப்பியவர்களை விளாசி வருகிறார்கள்.
சுப்மன் கில் 2023 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடி வருகிறார். மேலும், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை முந்தி அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.