இந்திய அணிக்கு தலைவலியாக மாறிய இலங்கை வீரர் சோனல்.. 4 இன்னிங்ஸ்களிலும் 50+ ரன்கள் குவிப்பு
கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது, இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்து 116 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இதன் மூலம் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சிக்கலாக மாறியது. குறிப்பாக சோனல் தினுஷா 4 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார்.
இந்தப் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 6 விக்கெட் இழந்து 229 என்ற ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணியில் சோனல் தினுஷா மற்றும் கேஷரா நுவந்தா ஜோடி சிறப்பாக சமாளித்து ரன் சேர்த்தது. இவர்கள் இருவரும் இந்திய பந்துவீச்சை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டதால் முதல் செஷனில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய ஸ்பின்னர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் மானவ் சுதர் ஆகியோர் திணறினர். மதிய உணவு இடைவேளையின் போது தினுஷா 55 ரன்களுடனும், நுவந்தா 46 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்கள் இருவரும் 7 வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் சேர்த்தனர்.

இத்தொடர் முழுவதும் இந்திய அணிக்கு சோனல் தினுஷா பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். அவர் விளையாடிய 4 இன்னிங்ஸ்களிலும் முறையே 100, 84, 103 மற்றும் 55* ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியுள்ளார். அவரது இந்த அபாரமான தற்காப்பு ஆட்டத்தால் இந்திய பந்துவீச்சாளர்களால் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் போனது.
உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 116 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதாலும், கொழும்பில் தொடர்ந்து மழை அச்சுறுத்தல் நீடிப்பதாலும் இந்தப் போட்டி டிராவில் முடிவடையவும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் இப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியமாகும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டிரா இந்தியாவின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவுக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.


Click it and Unblock the Notifications

