கொழும்பு: இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டி தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை சோனி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது.
இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கிரிக்கெட் தொடருக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில், டென் ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி நிறுவனங்கள் இடையே கடும் போட்டா போட்டி நிலவியது.
இறுதியில், சோனி நிறுவனம், 3.25 மில்லியன் இலங்கை பண மதிப்பு அளவுக்கு உரிமையை வாங்கியுள்ளது. டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இலங்கையில் அடுத்த 7 ஆண்டுகளில் நடைபெறும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமையை ஏற்கனவே பெற்றுள்ளது.
இருப்பினும், இந்தியாவின், இலங்கை சுற்றுப் பயணம், முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒன்று என்பதால், இலங்கை கிரிக்கெட் வாரியம், இதற்கான உரிமத்தை ஏலத்தின் மூலமே அளிக்க முடிவு செய்தது. இதனால் டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.