பெங்களூர்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில், சவுராஷ்டிரா உத்தரப் பிரதேசத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் (VJD முறைப்படி) வீழ்த்தியது. தீபக் தேசாய் மற்றும் சம்ரத் மன்கட் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. சமீர் ரிஸ்வி (88* ரன்கள்) மற்றும் அபிஷேக் கோஸ்வாமி (88 ரன்கள்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ரன் குவிப்பிற்கு வலு சேர்த்தனர். விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தபோதிலும், கோஸ்வாமி தனது அதிரடி ஆட்டத்தால் ரன் வேகத்தை குறையவிடவில்லை.

ஒரு நேர்த்தியான கவர் டிரைவ் மூலம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த கோஸ்வாமி, சதம் அடிக்க 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிங்கு சிங் 13 ரன்களில் மன்கட் பந்துவீச்சில் வெளியேற, ரிஸ்வி தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினார். அவர் 77 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ₹14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பிராசாந்த் வீர் 33 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்தார். ஜீஷன் அன்சாரி 20 ரன்கள் சேர்க்க, உத்தரப் பிரதேசம் கடைசி பத்து ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை எட்டியது. சவுராஷ்டிரா பந்துவீச்சில் சேத்தன் சக்காரியா 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பன்வார் மற்றும் மன்கட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
311 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா, தொடக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜாவை விரைவில் இழந்தது. எனினும், தீபக் தேசாய் மற்றும் சம்ரத் மன்கட் இணை சீரான வேகத்தில் ரன்களைக் குவித்து அணியை நிலைநிறுத்தியது. இந்த ஜோடி ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் 133 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
தேசாய் 59 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த மன்கட், 46 பந்துகளில் அரைசதம் எட்டினார். ஆனால், இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். இதற்கிடையே, சமர் கஜ்ஜாரும் விரைவாக ஆட்டமிழக்க, சவுராஷ்டிராவின் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் 7.45 ஆக உயர்ந்தது. இருப்பினும், சிராக் ஜானி களமிறங்கியவுடனேயே சரமாரியாக ரன் சேர்க்கத் தொடங்கினார்.
சிறு தூறலாக ஆரம்பித்த மழை தீவிரமடையவே, சவுராஷ்டிரா அணி ரன் குவிப்பை வேகப்படுத்தியது. சிராக் ஜானியும் தீபக் தேசாயும் நான்காவது விக்கெட்டுக்கு 62 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் சேர்த்தனர். தேசாய் 116 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். அப்போது மழை தீவிரமானதால் ஆட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, VJD முறைப்படி சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. மழை நின்றபோதிலும், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் மீண்டும் தொடங்கப்படவில்லை. இதன் விளைவாக, சவுராஷ்டிரா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தது. சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர், பந்துவீச்சில் 9 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.