கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத கேப்டனாக விளங்கும் நபர் சவுரவ் கங்குலி. இந்திய அணியில் கேப்டன் ஆகவும் பிசிசிஐ தலைவராகவும் பல மாற்றங்களை கங்குலி செய்திருக்கிறார். இன்று இந்திய அணி வெளி நாட்டு மண்களில் சர்வ சாதாரணமாக ஒரு தொடரில் வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு விதை போட்டது கங்குலி தான்.
2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை அழைத்துச் சென்று கங்குலி சாதனை படைத்திருக்கிறார். இன்று இந்திய அணி இளைஞர்களை நம்பி களமிறங்குகிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் கங்குலி தான்.

சேவாக், யுவராஜ், ஜாகிர் கான், ஹர்பஜன்சிங், தோனி என பல இளைஞர்களை அடையாளம் காண்பித்தவர் கங்குலி. இந்த நிலையில் கங்குலியின் ஒரு போன் கால் இரண்டு முறை இந்திய அணியின் தலையெழுத்தையே மாற்றி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. 2003- 2004 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறி வந்தது.
ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு செயல்பட்டு வந்த நிலையில் இதற்காக ஒரு தனி பேட்ஸ்மேனை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்த கங்குலி இந்த இடத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று ஆராய்ந்தார். அப்போதுதான் அவருடைய கண்களுக்கு தோனியின் பெயர் தென்பட்டது.
தோனியின் ரெக்கார்டுகளையும் அவருடைய பேட்டிங் ஸ்டைலையும் கங்குலி பார்த்தார். ஒட்டுமொத்த பிசிசிஐ யில் உள்ளவர்களும் தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் பட்டேல் பெயரை பரிந்துரைக்க , தேர்வு குழு அணியில் சேர்க்க முயற்சித்தது. அப்போது திடீரென்று ஒரு போன் கால் செய்த கங்குலி எனக்கு தோனி தான் அணியில் வேண்டும். தோனியை அணியில் சேருங்கள் என அப்போதைய பிசிசிஐ தலைவர் டால்மியாவிடம் கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து தோனி அணிக்குள் வந்தார். கங்குலியின் இந்த ஒரு போன் கால் இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்தையும் மாற்றியது. அதன் பிறகு தோனி 2007 டி20 உலக கோப்பை, 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை, ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் என பல்வேறு சாதனைகளை செய்தார். இதேபோன்று பிசிசிஐ தலைவராகவும் கங்குலி ஒரு போன் கால் செய்தார். 2020- 21 ஆம் ஆண்டு சமயங்களில் கங்குலி எடுத்த ஒரு தைரியமான நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டை புரட்டி போட்டது.
இந்தியா கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையில் வெல்லவில்லை. இதற்கு காரணம் விராட் கோலி கேப்டன்சியில் சில தவறுகளை செய்கிறார் என்பதை உணர்ந்த கங்குலி, அந்த இடத்திற்கு ரோகித் சர்மா தான் சரியான நபர் என்பதை முடிவெடுத்தார். ஆனால் விராட் கோலியை தூக்கினால் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் மீறி கங்குலி ஒரே ஒரு போன் கால் மூலம் தேர்வு குழுவை தொடர்பு கொண்டு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் படி வலியுறுத்தினார்.
இதனை விராட் கோலியே ஒரு பேட்டியில் ஒரு போன் கால் மூலம் என்னுடைய கேப்டன்ஷிப் பறிக்கப்பட்டது என்று கூறினார். அப்போது கங்குலியில் இந்த செயல் விமர்சிக்கப்பட்டாலும், இன்று இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் 2023, 50 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டி, 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம், 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஆசிய கோப்பை என பல சாதனைகளைப் படைத்திருக்கிறது. இதனால் கங்குலி ஒரு போன் காலில் தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதனை கேட்பது தான் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.