இந்தியா தொடரை வெல்லும்
இந்தியா இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த குறையை போக்கும் வகையில் இந்த முறை இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஆஸ்திரேலிய அணி இப்போது வலுவிழந்து காணப்படுகிறது. அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்மித், வார்னர் ஒரு வருட தடைக் காலத்தில் இருக்கின்றனர்.
பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை
ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் தொடர் எது என்றால் கங்குலி தலைமையில் 2003-04 இல் நடந்த டெஸ்ட் தொடர் தான். அந்த டெஸ்ட் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்தது. தற்போதுள்ள இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பற்றி பேசிய கங்குலி, "இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்தால் போதும், பந்துவீச்சாளர்கள் மற்ற வேலைகளை பார்த்துக் கொள்வார்கள்" என கூறினார். இந்திய பந்துவீச்சாளர்களான பும்ரா, புவனேஸ்வர், குல்தீப், கலீல் உள்ளிட்டோர் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
நான்கு பந்துவீச்சாளர்கள்
மேலும் கங்குலி கூறுகையில், "நான் வெளிநாடுகளில் நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்துவேன். ஏனெனில், சில ஓவர்களை சேவாக் அல்லது சச்சினிடம் கொடுத்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு அளிப்பேன். ஆனால், கோலிக்கு அந்த வாய்ப்பு இல்லை" என தெரிவித்தார். தற்போதுள்ள இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளராக இருப்பது ஹர்திக் பண்டியா மட்டுமே. அவர் இப்போது காயத்தில் இருக்கிறார்.
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு
மேலும் ரோஹித் சர்மாவை களம் இறக்குவது பற்றி கூறினார் கங்குலி. "என்னைக் கேட்டால் ரோஹித் சர்மாவை நான் ஆறாவது இடத்தில் களம் இறக்குவேன். இதற்கு எளிய காரணம் தான் உள்ளது. ரோஹித் இப்போது சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். ஒற்று பேட்ஸ்மேன் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்போது அவரை நாம் விட்டு விடக்கூடாது" என்றார் கங்குலி.