மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு துவக்கத்தில் இதே போல ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
லவ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டு இருந்தது. பாலிவுட் தயாரிப்பாளர்களான லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், விக்கிரமாதித்யா மோத்வானி அந்தத் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

திறமையான பாலிவுட் நடிகர்களுள் ஒருவரான ஆயுஷ்மான் குரானா அந்த திரைப்படத்தில் சவுரவ் கங்குலியின் கதாபாத்திரத்தை ஏற்று நடக்க இருப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் அந்தத் திரைப்படம் அப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. தற்போது மீண்டும் சவுரவ் கங்குலி வாழ்க்கை வரலாற்று திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி இள்ளது.
பல விருதுகளை வென்ற பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் ராவ் கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர், தலாஷ், கை போ சே, குயின், நியூட்டன், ஸ்திரீ, மேட் இன் சீனா, பதாய் தோ, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது இந்திய கிரிக்கெட் அணி உலகின் முன்னணி அணியாக இருக்கிறது. அதற்கான வளர்ச்சி சவுரவ் கங்குலியின் கேப்டன்சியில்தான் துவங்கியது. 2000 ஆவது ஆண்டின் துவக்கத்திலிருந்து கங்குலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் இந்திய கிரிக்கெட் அணி மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது.
யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், வீரேந்தர் சேவாக், தோனி போன்ற தலைசிறந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி. 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்து சென்று இருந்தார்.
அப்போது வலுவாக இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு கடும் போட்டி அளிக்கும் அணியாக இந்திய அணியை மாற்றினார். சில குறிப்பிட்ட தக்க வெற்றிகளையும் இந்திய அணி பெற்று இருந்தது. அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகினாலும் அவர் போட்ட விதையில் இந்திய அணி அசுர வளர்ச்சியை கண்டது.
அதன் பின் 2008இல் தோனி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியை பற்றி பேசும் யாராக இருந்தாலும் கங்குலி பெயரை சொல்லாமல் இருக்க முடியாது. இடையே கிரெக் சேப்பல் வரவால் கங்குலி பெரும் சரிவை சந்தித்தார். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாறு எப்படி இருக்கும் என திரையில் பார்க்க கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
மற்றொரு இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் முயற்சியும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.