கொல்கத்தா : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்த பிறகு அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் ரன்கள் சேர்க்க முடியாமல் அவர் தடுமாறுவதை பார்த்த போது தமக்கு ஆச்சரியமாக இருந்ததாக முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலியை ஒருநாள், டி 20 போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலக கங்குலி அறிவுறுத்தி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தான் கேப்டனாக இடம்பெற வேண்டும் என்று கங்குலி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் கொல்கத்த்கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி, விராட் கோலியை வெகுவாக பாராட்டினார். அப்போது பேசிய அவர், நாம் வாழ்க்கையில் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த வீரர் என்றால் அது கோலி தான். சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது அவர் என்பது சதம் அடித்திருக்கிறார். என்னை பொருத்தவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதிலே மிக சிறந்த வீரர் என்றால் அது விராட் கோலி தான்.
ஆனால் கோலி பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து விட்டு அதன் பிறகு தடுமாறியதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த போட்டிக்கு முன்பு விராட் கோலி கடந்த காலங்களில் தடுமாறினாலும் பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். இதன் மூலம் மிகப்பெரிய தொடர் விராட் கோலிக்கு அமையும் என நான் நினைத்தேன்.
அனைத்து வீரர்களுக்குமே பலம் ,பலவீனம் என்பது ஒன்று இருக்கிறது. பலவீனம் இல்லாத ஒரு வீரர் உலகத்தில் எங்கும் நீங்கள் பார்க்க முடியாது. இந்த பலவீனத்திற்கு எதிராக நாம் எப்படி தயார் படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்து நமது திறன் அமைந்திருக்கிறது. விராட் கோலியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் பாக்கி இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் விராட் கோலிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஏனென்றால் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்றால் அது கோலி தான். அவர் நிச்சயமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரன் குவிப்பார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் என்று கங்குலி கூறியுள்ளார்.