சர்ச்சைகள்
சமீபத்தில் கங்குலி - விராட் கோலி ஆகியோர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இந்திய அணி கேப்டன்சி மாறியது என்ற சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் இது அப்படியே மூடி மறைக்கப்பட்டது. இதன்பின்னர் கங்குலி அரசியலில் களமிறங்கப் போவதாகவும், இதற்காக பாஜகாவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தன.
ட்வீட்டால் சர்ச்சை
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று பரபரப்பு ட்வீட் ஒன்றை கங்குலி பதிவிட்டிருந்தார். அதில், கிரிக்கெட்டிற்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் மற்றொரு விஷயத்தை முன்னெடுக்க போகிறேன். எனது புதிய அத்தியாயத்திற்கு மக்களின் ஆதரவு தேவை என பதிவிட்டார். இது அவர் அரசியலில் குதிக்கிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்தது. இதற்கேற்றார் போன்று கொல்கத்தாவின் முக்கிய பகுதியில் புதிய வீட்டை வாங்கியிருந்தார்.
கங்குலி பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து கங்குலி அதிகாரப்பூர்வமாக பேசியுள்ளார். அதில், நான் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. உலகம் முழுவதும் செயல்படப்போகும் புதிய கல்வி செயலியை தொடங்கவுள்ளேன். அதனை தான் எனது புதிய அவதாரம் எனக் கூறியிருந்தேன், ஆதரவும் கொடுக்க கேட்டிருந்தேன் எனத் தெரிவித்தார்.
கெத்தான பயணம்
இந்திய கிரிக்கெட்டில் தற்போது எந்தவித அரசியல் தொடர்பும் இன்றி மிகுந்த செல்வாக்குடன் இருப்பவர் சவுரவ் கங்குலி. கடந்த 2019ம் ஆண்டு முதலே இவரின் அரசியல் பிரவெசம் குறித்து பேசப்பட்டு வருகின்றன. எனினும் அதனை கடந்து, தற்போது ஐபிஎல் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.