சவுரவ் கங்குலியின் இந்த வழக்குக்கு சவால் விடும் வகையில், "இது கால்பந்து மைதானம்.. கங்குலியாக இருந்தாலும் விடமாட்டோம்" என்று அர்ஜென்டினா ரசிகர் மன்ற தலைவர் உத்தம் சாஹா பேசி இருப்பது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

சமீபத்தில் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்திற்கு அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி வந்தபோது, பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களால் மெஸ்ஸியை சரியாகப் பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதான நாற்காலிகளை அடித்து நொறுக்கி கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த மோசமான ஏற்பாட்டிற்கு சவுரவ் கங்குலி தான் காரணம் என்றும், அவர்தான் இந்த நிகழ்ச்சியின் இடைத்தரகராக செயல்பட்டார் என்றும் கொல்கத்தா அர்ஜென்டினா ரசிகர் மன்ற தலைவர் உத்தம் சாஹா குற்றம் சாட்டியிருந்தார்.
உண்மையில் அன்றைய தினம் கங்குலி ஒரு பார்வையாளராக மட்டுமே மைதானத்திற்குச் சென்றிருந்தார். கலவரம் வெடித்ததும் ஏமாற்றத்துடன் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில், தன் மீது அபாண்டமாக பழி சுமத்திய உத்தம் சாஹா மீது ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளார் கங்குலி. "தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்" என கங்குலி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்குக்குப் பயந்து மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்தால், உத்தம் சாஹா மேலும் ஆவேசமாகப் பேசியுள்ளார். ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "நாங்கள் சவுரவ் கங்குலிக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இது கால்பந்து மைதானம், கிரிக்கெட் மைதானம் அல்ல. அவர் ஒரு சிறந்த வீரர், அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் கால்பந்து மைதானத்தில் ஒரு தவறு நடந்தால், அது சவுரவ் கங்குலியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, நாங்கள் யாரையும் சும்மா விடமாட்டோம்." என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே இந்த விவகாரத்தால் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளார். மெஸ்ஸி தனது பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாலும், கொல்கத்தாவில் அவர் பற்ற வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை.