டெல்லி : டெல்லியில் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் புஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்பதே குற்றச்சாட்டு.
இவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி போலீசாரிடம் புகார் அளித்தும், அவர் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு விளையாட்டுத்துறை சேர்ந்த வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கிரிக்கெட்டில் கபில் தேவ், ஹர்பஜன்சிங் தவிர வேறு யாரும் வாய் திறக்கவில்லை.இது குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், தமது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலி பேசுகையில் மல்யுத்த வீராங்கனைகள் தங்களுடைய போராட்டத்தை தொடரட்டும்.
இது அவர்களுடைய போர்க்களம். அங்கு என்ன நடக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் வெறும் செய்தித்தாள்களில் வருவதை தான் படித்தேன். ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாக தெரியாமல் ஏதும் சொல்லக்கூடாது என்பது என்னுடைய கருத்தாகும். இருப்பினும் மல்யுத்த வீரர்கள் நமது நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று கொடுத்திருக்கிறார்கள்.
நமது நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்கள் உடைய பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன் என்று கங்குலி கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டும். அவரை போலீசார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.