வீட்டிற்குள் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாடுமுழுவதும் முடங்கியுள்ள நிலையில், இதுவரை கண்டிராத பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற வேண்டிய நிலையில் மாநில அரசுகளும் அவர்களை வீடுகளில் இருந்து வெளியில் வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
கேள்விக்குறியான ஐபிஎல் 2020
சர்வதேச அளவில் விளையாட்டு உலகமே முடங்கியுள்ளது. விளையாட்டு போட்டிகளை காண முடியாமல் ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் அடையாளமான ஐபிஎல் போட்டிகள் வரும் 15ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகள் கண்டிப்பாக சாத்தியப்படாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
சாதகமான சூழல் இல்லை
கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமானநிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில், ஐபிஎல் குறித்து கூறுவதற்கு ஒன்றும் இல்லை. வீரர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு செல்வார்கள் என்று சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய நிலையில் எந்த விளையாட்டிற்கும் சாதகமான நிலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாளை அறிவிக்கப்படும்
இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகிகளுடன் இறுதி விவாதம் மேற்கொண்டு, ஐபிஎல் 2020 குறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சவுரவ் கங்குலி மேலும் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் துவங்குவது குறித்த புதிய அறிவிப்பு நாளை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. ஹர்பஜன் சிங், கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் ஐபிஎல் தள்ளி வைக்கப்படுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.