டெல்லி: 6வது ஐபிஎல் தொடரில் நடந்த சூதாட்டம் குறித்த புகார்களை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் கமிட்டியில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் இடம் பெற்றுள்ளார்.
முழு அளவிலான கமிட்டியின் முதல் கூட்டத்தில் அவர் பங்கு கொண்டார். இதற்காக அவர் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு வந்துள்ளார்.
6வது ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் நடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீசாந்த் வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க முத்கல் கமிட்டியை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த கமிட்டியில் கங்குலியும் சேர்க்கப்பட்டுள்ளார். கமிட்டியின் முழு அளவிலான முதல் கூட்டம் டெல்லியில் நடந்த்து. அதில் கங்குலி கலந்து கொண்டார்.
இதுகுறித்து நீதிபதி முத்கல் கூறுகையில், கமிட்டியில் கங்குலி சேர்க்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அவர் விசாரணையில் இணைந்துள்ளார். எனது அலுவலகத்தில் கூட்டம் நடந்த்து.
இந்த கூட்டத்தின் விவாதம் ஆக்கப்பூர்வமாக இருந்த்து. விசாரணைக்கு முன்னதாகவே கங்குலிக்கு, இந்த விசாரணை குறித்த முழு விவரங்களும், ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்டன. அவரும் ஆயத்தமாகவே வந்திருந்தார். இதற்கு மேல் இதுகுறித்த விவரங்களை நான் வெளியிட முடியாது.
இப்போது முதல் எனது அலுவலகத்தில் கமிட்டியின் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார் முத்கல்.
கமிட்டியில் கங்குலி தவிர கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், மூத்த வழக்கறிஞர் நிலோய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிபி மிஸ்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.