கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து சிஎஸ்கே அணியிடமும் தோனியிடமும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் கேப்டன் கங்குலி பேசி இருக்கிறார்.
சிஎஸ்கே அணி கடந்த சீசனில் படுமோசமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. ஆனால் இம்முறை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையிலும் பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இது தோனிக்கு கேப்டன்ஷிக்கு கிடைத்த வெற்றி என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, நடப்பு தொடரில் சிஎஸ்கே அணியும் தோனியும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பெரிய போட்டிகளை எல்லாம் எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து மற்றவர்களுக்கு அவர்கள் வழி காண்பித்து இருக்கிறார்கள்.
எப்போதும் போல் தோனியின் கேப்டன்சி பிரமிக்கும் வகையில் இருந்தது. நெருக்கடியான போட்டிகளை எப்படி வெல்ல வேண்டும் என தனது கேப்டன்சி மூலம் அவர் மற்றவர்களுக்கு காண்பித்திருக்கிறார். இதைப் போன்று நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். அதில் ரிங்கு சிங், துருவ் ஜூரல், ஜெய்ஸ்வால் ஆகியோர் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
இதே போன்று ஜித்தேஷ் சர்மா, பஞ்சாப் அணிக்காகவும் சூர்யகுமார் யாதவும், திலக் வர்மாவும் மும்பை அணிக்காகவும் நன்றாகவே தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர். இதனை இந்த இளம் வீரர்கள் நன்றாக வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று கங்குலி கூறியுள்ளார். ஆர் சி பி அணி முக்கிய ஆட்டத்தில் choke ஆகி தொடரை விட்டு வெளியேறி வரும் நிலையில் கங்குலி தோனியை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.