
2020 டி20 உலகக்கோப்பை
2020 டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களை ஆஸ்திரேலியா வரவைத்து, அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி டி20 உலகக்கோப்பையை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்துவது கடினம்.

தள்ளி வைக்கும் முடிவில் ஐசிசி
மேலும், ஒரு உலகக்கோப்பை தொடர் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்துவதும் சிறப்பாக இருக்காது. அந்த தொடரின் வருமானமும் வெகுவாக குறையும். இதை கருத்தில் கொண்டு ஐசிசி நிர்வாகிகள் 2020 டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளி வைக்கும் முடிவில் உள்ளனர்.

ஐபிஎல் திட்டம்
டி20 உலகக்கோப்பை நடக்கா விட்டால், அக்டோபர் மாதம் எந்த கிரிக்கெட் தொடரும் நடக்காது. அந்த சமயத்தில் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன் இடையே பிசிசிஐ - ஐசிசி அரசியல் ஆட்டம் துவங்கியது.

ஐசிசி - பிசிசிஐ மோதல்
தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் ஷஷான்க் மனோகருக்கும், தற்போதைய பிசிசிஐ லாபிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அவரது பதவிக் காலம் ஜூலையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அதையே சாக்காக வைத்து ஐசிசி தலைவர் தேர்தல் வருவதால் டி20 உலகக்கோப்பை குறித்து இப்போது முடிவு எடுக்கப் போவதில்லை என கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பை மட்டும் வெளியிடாமல்..
அக்டோபர் மாதம் நடக்க வேண்டிய உலகக்கோப்பை தொடருக்கு குறைந்தது நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தே திட்டமிட்டால் தான் தொடரை சிக்கல் இல்லாமல் நடத்த முடியும். எப்படியும் தொடர் நடக்காது என்ற நிலையில், தள்ளி வைக்கும் அறிவிப்பை மட்டும் வெளியிடாமல் உள்ளது.

பிசிசிஐக்கு சிக்கல்
அதன் மூலம், ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை பிசிசிஐ துவங்க முடியாத நிலை உள்ளது. ஐசிசி இதை வேண்டுமென்றே செய்கிறதா? என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

கங்குலி முடிவு
டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்படுவதை தவிர வேறு வழியே இல்லை என்பதை ஊகித்துள்ள கங்குலி, ஐபிஎல் தொடரை நடத்த ஆயத்தமாகி உள்ளார். அதற்கான முதற்கட்டமாக மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கு, பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதை தெரிவித்துள்ளார்.

காலி மைதானத்தில் ஐபிஎல்
ஐபிஎல் குறித்து மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு நடத்த இருக்கும் வாய்ப்புகளை பிசிசிஐ பார்த்து வருவதாகவும், காலி மைதானத்திலாவது தொடரை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

வீரர்கள் ஆர்வம்
ரசிகர்கள், ஐபிஎல் அணிகள், வீரர்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் நடக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பல வீரர்கள் ஐபிஎல்-இல் பங்கேற்க ஆர்வமாக இருப்பதை கூறி இருந்தனர் என்றும் கங்குலி கூறி உள்ளார்.

அந்த திட்டம் நிறைவேறாது
ஐபிஎல்-இல் ஆட வீரர்களும் ஆர்வமாக இருப்பதை உறுதி செய்த பின்னரே ஐபிஎல் நடத்த கங்குலி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. கங்குலியின் இந்த முடிவின் மூலம், டி20 உலகக்கோப்பையை வைத்து, ஐபிஎல்லுக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் திட்டம் நிறைவேறாமல் போகும்.


Click it and Unblock the Notifications











