மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்து வந்த ரவி சாஸ்திரிக்குப் பதில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை இயக்குநராக்க கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் சீனிவாசன் விசுவாசிகளுக்கும் படிப்படியாக மூட்டை கட்டி அனுப்பி வைக்கிறது டால்மியா தலைமைியலான புதிய நிர்வாகம் என்கிறார்கள்.

சீனிவாசன் நிர்வாகத்தின்போது முக்கியப் பொறுப்புகளுக்கு வந்தவர்களை விலகிக் கொள்ளுமாறும் டால்மியா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
வங்கதேச சுற்றுப் பயணத்துக்கான அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. எனவே இந்த பயணத்திற்கான இயக்குநராக கங்குலி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரின்போது பாதியில் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் சாஸ்திரி. அதன் பின்னர் ஆஸ்திரேலியா தொடருக்கும் அவரே நீடித்தார். உலகக் கோப்பை வரை அவரே இயக்குநராக செயல்பட்டார்.
தற்போது ஜக்மோகன் டால்மியா பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவர் சீனிவாசன் ஆட்களை களையெடுத்து வருகிறாராம். அந்த வகையில் சாஸ்திரியை தூக்க விட்டு தனது ஆளான கங்குலியைப் போடவுள்ளார் என்கிறார்கள்.
கங்குலியைக் கொண்டு வருவதற்கு பிசிசிஐ கூறும் காரணம், வெளிநாட்டு டூர்களில் எப்படி வெல்ல வேண்டும் என்ற வித்தை கங்குலிக்குத் தெரியும். எனவேதான் அவரை இயக்குநராக்குவதாக கூறுகிறார்கள்.
வங்கதேசம் செல்லும் இந்திய அணி அங்கு ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
கங்குலியைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோருக்கும் பிசிசிஐ ஏதாவது பொறுப்பு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.