மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பற்றி பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறிய கருத்துக்கு, இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையிலான மோதல் ஊரறிந்த ஒன்று. பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த போது, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.

கங்குலி மீதான கோபத்தை விராட் கோலி ஐபிஎல் தொடரின் போது வெளிப்படையாகவே காட்டினார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கங்குலியை பின் தொடர்வதை விராட் கோலி நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில் விராட் கோலியை பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் சோயப் அக்தர் பேசிய கருத்திற்கு சவுரவ் கங்குலி தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், விராட் கோலி குறித்து பாகிஸ்தான் அணியின் அக்தர் சில அறிவுரைகளை வழங்கினார். அதில், உலகக்கோப்பைத் தொடருக்கு பின் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். முழுக்க முழுக்க டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க வேண்டும்.
சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி தகர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்காமல் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவது தான் விராட் கோலிக்கு சிறந்ததாக இருக்கும். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை கூடுதலாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சோயப் அக்தரின் கருத்து குறித்து கங்குலியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த வகையான கிரிக்கெட்டை விளையாடினாலும், விராட் கோலியால் சிறப்பாக செயல்பட முடிகிறது. விராட் கோலிக்கு எப்படியான கிரிக்கெட்டை விளையாட விருப்பமோ, அப்படியே விளையாடினாலே போதுமானது என்று நினைக்கிறேன் என்று பதில் அளித்தார். கங்குலியின் இந்த கருத்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.