மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது முதல் பயணத்தை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார். இந்த பொறுப்பில் அணிக்கு இரண்டு தொடர் வெற்றிகளை வாங்கிக் கொடுத்த அவர், தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் கலாச்சாரத்தையும் பாராட்டினார்.
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது இதுவே முதல்முறை எனக் கங்குலி தெரிவித்தார். வீரராக இருப்பதுடன் ஒப்பிடுகையில் இந்தப் பணி முற்றிலும் மாறுபட்டது. அனுபவங்கள் இங்கு பெரிய அளவில் உதவவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் சிறிய பணிகளிலும், பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகப் பொறுப்புகளிலும் மட்டுமே இருந்துள்ளார்.

பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி இதுவரை சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. சனிக்கிழமை பார்ல் ராயல்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது, இந்த சீசனில் பெற்ற இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியாகும். இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இது குறித்து பேசிய கங்குலி, "என் வாழ்நாளில் முதல்முறையாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பேற்றுள்ளேன். ஆனால் இதை நான் ரசிக்கிறேன். நான் எத்தனை போட்டிகளில் விளையாடியிருந்தாலும், கேப்டனாக இருந்திருந்தாலும், இது வேறுபட்டது. நானும் கற்றுக்கொண்டு புரிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பணியைச் செய்கிறேன்."
"உலகக் கோப்பை, ஐபிஎல் அல்லது SA20 எதுவாகினும், இறுதிக்கட்ட போட்டிகள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். அப்போது நீங்கள் உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இலக்கை தற்காக்கும் போது கிடைக்கும், இந்த வெற்றிகள் நம்பிக்கையைத் தருகின்றன. இதைத் தொடர்வோம் என்று நம்புகிறேன். ஆனாலும், விளையாட்டில் ஒவ்வொரு நாளும் புதியதே. புது உத்வேகத்துடன் தயாராவோம்."
"இந்த இடம் எங்களுக்கு அற்புதமான களமாக அமைந்துள்ளது. நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும் வந்தேன். நாங்கள் தோற்றாலும், அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினோம்," என்று கங்குலி கூறினார். "தென் ஆப்பிரிக்கா ஒரு சிறந்த கிரிக்கெட் பூமி. இத்தொடர் சிறப்பாக நடைபெறுகிறது; வார நாட்களில் கூட மைதானங்கள் நிரம்பி வழிகின்றன. கேப் டவுன், பிரிட்டோரியா அல்லது பார்ல் என எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளது, இது ஒரு சிறந்த தொடர்," எனவும் அவர் புகழாரம் சூட்டினார்.