அங்கே தான் செல்ல வேண்டும்
அதன்படி, இனி இந்திய வீரர்கள் காயத்தில் இருந்து குணமான பின், உடற்தகுதி பயிற்சிகள் பெற தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது.
தேசிய கிரிக்கெட் அகாடமி
பிசிசிஐயின் கீழ் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகாடமி இந்திய தேசிய அணி வீரர்கள் மற்றும் பிசிசிஐ கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான இந்தியா ஏ, அண்டர் 19, மகளிர் அணி உள்ளிட்ட உள்ளூர் அணிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் உடற்தகுதியை பரிசோதித்து, மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறது.
புறக்கணித்த இந்திய வீரர்கள்
எனினும், சர்வதேச தரத்திலான வசதிகள் இல்லை என்பதை சுட்டிக் காட்டியும், அங்கே அளிக்கப்படும் உடற் தகுதி பயிற்சிகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தி காயத்தை பெரிதுபடுத்துவதாக கருதும் சில இந்திய வீரர்கள், அங்கே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பும்ரா சர்ச்சை
சமீபத்தில், காயத்தில் சிக்கிய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியை நாடாமல் இங்கிலாந்து சென்று சிறப்பு மருத்துவரை சந்தித்தார். பின், தனிப்பட்ட உடற்தகுதி பயிற்சி நிபுணரை நியமித்து கிரிக்கெட் ஆடும் அளவுக்கு தன் உடற்தகுதியை மேம்படுத்திக் கொண்டார்.
கங்குலி தலையீடு
இந்த விவகாரம் பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் சென்றது. இந்திய வீரர்கள் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியை புறக்கணித்து வருவது பற்றி அவர் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.
டிராவிட்டுடன் சந்திப்பு
இது குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட்டை சந்தித்தார் கங்குலி. இந்திய வீரர்கள் குறித்த ஆலோசனைக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு பற்றி அறிவிப்பை வெளியிட்டார்.
என்ன சொன்னார் கங்குலி?
"நான் டிராவிட்டை நேற்று சந்தித்தேன். நங்கள் ஒரு செயல்பாட்டை அமல்படுத்தி இருக்கிறோம். பந்துவீச்சாளர்கள் இனி தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் செல்ல வேண்டும். வேறு யாரேனும் தங்களை குணப்படுத்திக் கொள்ள விரும்பினால், அவர்கள் நிச்சயம் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல வேண்டும்" என்றார் கங்குலி.
வீரர்களுக்கான வசதிகள்
மேலும், "என்ன காரணமாக இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்வோம். நாங்கள் வீரர்கள் வசதியுடன் இருக்கும்படியும், அவர்கள் தனியே கைவிடப்பட்டது போன்ற உணர்வை பெறாத வகையில் பார்த்துக் கொள்வோம். எனவே, நாங்கள் இந்த வழியில் தான் செல்ல இருக்கிறோம்" என்றார் கங்குலி.
18 மாத காலம்
தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய கட்டிட வேலைகள் விரைவில் துவங்க உள்ளதாகவும், இன்னும் 18 மாதங்களில் தேசிய கிரிக்கெட் அகாடமி மிகவும் சிறப்பாக செயல்படும் என்றும் உறுதி அளித்தார் பிசிசிஐ தலைவர்.
இந்திய வீரர்கள் நிலை
கங்குலியின் இந்த அறிவிப்பால், இந்திய வீரர்கள் இனி காயம் ஏற்பட்டால் தங்கள் விருப்பப்படி வெளிநாட்டிற்கு செல்ல முடியாது. அதே போல, தனிப்பட்ட பயிற்சி நிபுணர்களையும் நியமித்துக் கொள்ள முடியாது.