கொல்கத்தா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருக்கும் ராகுல் டிராவிட் விடை பெறுகிறார். இதனால் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற தேடுதல் வேட்டை தற்போது தொடங்கி இருக்கிறது.
ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் போன்ற பல வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக வர விரும்பவில்லை. இதனால் இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீரர்களையே பயிற்சியாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யலாம் என்று பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்க மாட்டேன் என்று ராகுல் டிராவிட் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் அந்த பொறுப்புக்கு கம்பீர் வரலாம் என்று செய்திகள் வெளியானது. இது குறித்து பலமுறை கேள்வி கேட்கப்பட்டதற்கு, கம்பீர் கடைசியாக விடை அளித்தார். தான் இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு வர விரும்புவதாகவும் அந்த பணியை கிடைத்தால் அதைவிட பெரிய கவுரவம் வேறு ஏதுமில்லை என்றும் கம்பீர் பதிலளித்தார்.
இந்த நிலையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலி தற்போது ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிய தாமும் விரும்புவதாக கூறினார். ஒருவேளை கம்பீர் அந்தப் பணிக்கு ஆசைப்பட்டால் நிச்சயம் அவர் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்றும் கங்குலி கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய கங்குலி ரிஷப் பண்ட், தற்போது நல்ல பார்மில் இருப்பதாகவும், வரும் டி20 உலக கோப்பையில் நிச்சயம் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி நன்றாக விளையாடும். ஏனென்றால் அவர்களை விட நாம் பலமாக இருக்கிறோம் என்றும் கங்குலி கூறினார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தாமும் வர விருப்பம் இருப்பதாக கங்குலி கூறி இருப்பது பெரும் முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்திய அணி தற்போது வெற்றிகரமாக திகழ்வது என்றால் அதற்கு விதை போட்டது கங்குலிதான். அப்படி இருக்கும் பட்சத்தில் கங்குலி பயிற்சியாளராக வந்தால் அது நிச்சயம் இந்திய அணிக்கு நன்மை பயக்கும். எனினும் விராட் கோலிக்கும் கங்குலிக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் இருக்கும் வரை கங்குலி இந்த பதவிக்கு வர மாட்டார் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.