மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய மகளிருக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிரை நினைத்து நாடே பெருமையடைந்துள்ளதாகவும், நாளைய இறுதிப்போட்டியில் வெற்றி கொள்ள வாழ்த்துக்கள் என்றும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணி, 4 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 21ம் தேதி துவங்கிய ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் குழு போட்டிகளில் மோதிய இந்திய அணி ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணியை தொடர்ச்சியாக வெற்றி கொண்டு அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அங்கு இங்கிலாந்துடன் மோதவிருந்த போட்டி மழை காரணமாக தடைபட்டு, புள்ளிகள் அடிப்படையில், நேரடியாக இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சர்வதேச அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும் 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், எதிரணியினரின் பலங்கள் மற்றும் பலவீனங்களை நன்கு உணர்ந்துள்ளன. இதனால் இந்தப் போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் போட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையிலும் சாதனை நிகழ்ந்துள்ளது. இதுவரை 75,000க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இந்திய வீராங்கனைகளுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். கேப்டன் விராட் கோலி போன்ற கிரிக்கெட் பிரபலங்களும், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் டிவிட்டர் மூலம் இந்திய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள சவுரவ் கங்குலி, அவர்களால் நாடே பெருமை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் நாளை இரண்டாவது முறையாக மோதுகின்றன. தொடரின் முதல்நாளின் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிய நிலையில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் 17 ரன்கள் வித்தியாசத்தில் பெவிலியனை நோக்கி ஓடவிட்டனர். இந்த வெற்றிமூலம் இந்தியா ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்த நிலையில், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தை பிடித்தது.