பொலிவை இழந்த இந்திய அணி
இந்திய அணி 1970 மற்றும் 80களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று இருந்தது. அந்த காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட்டில் கோலோச்சி வந்தது. அதன் பின் 90களில் இந்திய கிரிக்கெட் அதன் பொலிவை இழந்தது. வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது.
சிறந்த வீரர்கள் இருந்தாலும்..
சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி போன்றோர் 90கள் முழுவதும் அணியில் ஒன்றாக ஆடினர். பின் டிராவிட், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மன் என சிறந்த வீரர்கள் அணியின் இணைந்தனர். ஆனாலும், இந்திய அணி வெற்றிகளை குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியா ஆதிக்கம்
அப்போது கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி யாரையும் மதிக்காத அணி. அதே போல ஆசிய அணிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் மதிக்காத நிலை அப்போது அதிகம் இருந்தது. ஆசிய அணிகளுக்குள்ளும் போட்டி இருந்தது.
மோசமான நிலையில் இந்திய அணி
இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பின்தங்கி இருந்தது. அப்போது ஆசிய அணிகளான இலங்கை, பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கி இருந்தது என்பதே உண்மை. அந்த சமயத்தில் கேப்டன் ஆன சௌரவ் கங்குலி, இந்திய அணி பற்றி மற்ற அணிகளுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தார்.
போட்டிகளில் ஆக்ரோஷம்
இந்திய வீரர்கள் எளிதாக விட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தை முதலில் அழிக்க நினைத்த அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் துவங்கினார். அது மட்டுமின்றி, எதிரணி இந்தியாவை மதிக்கவில்லை என்றால் டாஸ் போடும் போது அதன் எதிர்வினையை அவர்கள் சந்திப்பார்கள்.
கங்குலி வரமாட்டார்
ஆம், எதிரணி கேப்டன் களத்துக்கு வந்தாலும், கங்குலி வர மாட்டார். அவர்கள் நீண்ட நேரம் களத்தில் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே கங்குலி டாஸ் போட வருவார். இது ஒரு வகையில் "எனக்காக நீங்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். நான் முக்கியமானவன்" என கங்குலி எதிரணிக்கு இந்தியா சார்பாக உணர்த்துவது தான்.
ஸ்டீவ் வாஹ் அனுபவம்
ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவ் வாஹ் 2001இல் இந்திய சுற்றுப் பயணத்தில் கங்குலி எப்படி தன்னை பல போட்டிகளில் டாஸ் போடும் போது காக்க வைத்தார் என தன் சுய சரிதையில் எழுதி இருக்கிறார். அவர் இதை மரியாதை குறைவான நடவடிக்கையாக பார்க்கிறார்.
ஏன் அப்படி செய்தார் கங்குலி?
ஆனால், ஆஸ்திரேலிய பயிற்சியாளர், இந்திய வீரரிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கங்குலி அன்று அப்படி செய்தார். இந்திய அணியை, இந்திய வீரர்களை அவமதித்தால் இது தான் நடக்கும் என உணர்த்தினார் கங்குலி.
கங்குலிக்கு முன்..
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைனும் அது போன்ற அனுபவத்தை தான் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் இந்திய அணி கங்குலி வரும் முன் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் நல்ல அணியாக இருந்ததாக கூறி உள்ளார்.
எளிதாக பழகும் வீரர்கள்
"குட் மார்னிங், எப்படி இருக்கிறீர்கள்?" என விசாரித்துக் கொண்டு எளிதாக பழகும் வீரர்கள் அணியில் இருந்தார்கள். ஆனால், கங்குலி வந்த பின் தான் இந்திய அணி கடுமையான அணியாக மாறியது. யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் போன்ற ஆக்ரோஷமான வீரர்கள் அதன் பின் தான் வந்தனர் என குறிப்பிட்டுள்ளார் நாசிர் ஹுசைன்.