மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார் நட்சத்திர வீரர் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் 47 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விராட் கோலிக்காக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே விராட் கோலி குறித்து அவரது ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் வலம் வந்தனர். விராட் கோலி எந்த நாட்டுக்கு கிரிக்கெட் விளையாட சென்றாலும், மனைவி அனுஷ்காவையும் அழைத்து சென்றார்.
இவர்களுக்கு 2021ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் அந்த குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்து கேமராக்களில் இருந்து பாதுகாப்பாக வளர்த்து வருகின்றனர். அதேபோல் பெண் குழந்தை பிறந்த பின் விராட் கோலி முற்றிலும் வேறு மனிதராகவே மாறிவிட்டார். களத்தில் ஆக்ரோஷத்திற்கு பெயர்போன விராட் கோலி, மகிழ்ச்சியாக கிரிக்கெட்டை விளையாடினார். இதனை விராட் கோலி வேறு ஒரு நிலைக்கு சென்றுவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினர் அடுத்த குழந்தையை வரவேற்க தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி விளையாடிய பெரும்பாலான போட்டிகளுக்கு அனுஷ்கா சர்மா நேரில் வருகை தந்தார். ஆனால் அதன்பின் விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா பயணிப்பதை பார்க்க முடியவில்லை. அதேபோல் படப்பிடிப்புகளை முடித்து கொடுத்துவிட்டு வீட்டிலேயே ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இன்னும் சில மாதங்கள் விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் எப்படி முதல் குழந்தை பற்றிய அறிவிப்பை சரியான நேரத்தில் வெளியிட்டார்களோ, அதேபோல் இரண்டாவது குழந்தை குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.