மும்பை: லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் லக்னோ அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. அப்போது ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது டூ பிளஸிஸ் அடித்த பவுண்டரியை தடுக்க லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தீவிரமாக முயற்சி செய்தார். அப்போது திடீரென காலில் தவறி விழுந்ததில் கேஎல் ராகுலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக களத்தில் இருந்து கேஎல் ராகுல் வெளியேறும் நிலை ஏற்பட்டது. களத்தில் இருந்து வெளியேறும் போது கூட சரியாக நடக்க முடியாமல் நொண்டி கொண்டே மற்ற வீரர்களின் உதவியுடன் தான் நடந்து சென்றார். பின்னர் பேட்டிங்கின் போது கடைசி வீரராகவே கேஎல் ராகுல் களமிறங்கினார். அப்போது கேஎல் ராகுலால் ஓட முடியவில்லை. நடக்க மட்டுமே முடிந்ததால், அவரால் ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக க்ருனால் பாண்டியா பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் கேஎல் ராகுலுக்கு மும்பையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால், அவர் குணமடைய வெகு நாட்களாகும் என்று கூறப்படுகிறது. கேஎல் ராகுலின் காயத்தின் தன்மையை இந்திய கிரிக்கெட் அகாடமி மருத்துவக் குழு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனால் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மே 23ம் தேதியே புறப்பட உள்ள நிலையில், காயமடைந்த உனாத்கட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்கள் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்தில் ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இதனால் இந்திய அணியில் காயமடைந்த உனாத்கட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு பதிலாக இஷாந்த் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் அனுபவ வீரர் ரஹானே தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாய் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.