
அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணி தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 14 ரன்களிலும், ஜானி பாரிஸ்டோ 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.அதிரடியாக விளையாட முற்பட்ட சால்ட் பத்து பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சிஎஸ்கே வீரர் அசத்தல்
கேப்டன் ஜாஸ் பட்லர் நிதானமாக விளையாடி 19 ரன்கள் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய லிவிங் ஸ்டோன் 26 பந்துகளில் 38 ரன்களும், சாம் கரன் 18 பந்துகளில் 35 ரன்களும் எடுக்க, இங்கிலாந்து அணி 201 ரன்களில் ஆட்டம் இழந்தது.தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தரப்பில் சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மூன்று டக்அவுட்
இதனை அடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். குயின்டன் டி காக் 5 ரன்களிலும், ஜெனிமான் மாலன்,வெண்டர் டுசன் , ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.

83 ரன்களில் சுருண்டது
இதனால் தென்னாப்பிரிக்க அணி 6 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் 12 ரன்களிலும், கிளாசன் 33 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொதப்பியதால் தென்னாப்பிரிக்க அணி 83 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இங்கிலாந்து தரப்பில் டோப்லி இரண்டு விக்கெட்டுகளையும், ஆதில் ரசித் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை லீட்ஸ் நகரில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











