99 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. குல்தீப் யாதவ் கலக்கல் பந்துவீச்சு.. சரிந்தது மில்லர் படை
டெல்லி : இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் ஆட்டமிழந்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடந்தது.
டெல்லியில் மழை பெய்ததால், ஆட்டம் அரைமணி நேரம் வரை தாமதமாக தொடங்கியது. டாஸ் பெரும் முக்கியத்துவம் பெரும் இன்றைய ஆட்டத்தில், டாஸ் வென்ற ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சுழற்பந்துவீச்சு
ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக இருந்ததால் ஷிகர் தவான், முதல் ஓவரையே சுழற்பந்துவீச்சை வைத்து தான் தொடங்கினார். முதல் ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்து வீச அந்த ஓவரில் 2 ரன்கள் தான் சென்றது. ஒரு முனை வேகப்பந்துவீச்சு, மறுமுனை சுழற்பந்துவீச்சு என ஆட்டத்தை ஷிகர் தவான் நகர்த்தினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

அடுத்தடுத்து விக்கெட்
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் குயின்டன் டி காக் 6 ரன்களில் வாசிங்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜென்னிமான் மாலன் 15 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து ஹெண்ட்ரிக்ஸ் 3 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

தடுமாற்றம்
இதனையடுத்து, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சி ஏய்டன் மார்க்கரம் தலையில் விழுந்தது. ஆனால் அவரும் ஷாபாஸ் அகமது பந்தில் சாம்சனிடம் பிடிப்பட தென்னாப்பிரிக்க அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.கேப்டனாக களமிறங்கிய டேவிட் மில்லர் 3 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கிளாசன் மட்டும் போராடி 34 ரன்கள் சேர்த்தார்.

குல்தீப் அபாரம்
இதனையடுத்து குல்தீப் யாதவ் தனது ஓவரை வீச தொடங்கினார். அவருடைய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4.1 ஓவர் மட்டுமே வீசிய அவர் 18 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 27.1வது ஓவரில் 99 ரன்களுக்கு சுருண்டது.


Click it and Unblock the Notifications