மிர்பூர்: தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச இளம் வீரர்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இடையே மோதலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்கள் இருவர் மட்டுமே இந்த மோதலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவர் செய்த அத்துமீறல் செயலை, அந்த அணியின் மற்ற வீரர்கள் ஆதரிக்கும் வகையில் அவர்களும் வங்கதேச வீரர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச வளர்ந்து வரும் அணிகளுக்கு (எமர்ஜிங் டீம்) இடையேயான டெஸ்ட் போட்டி வங்கதேச நாட்டில் உள்ள மிர்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் சிபோ நெட்டுலி வங்கதேச வீரர் ரிப்பன் மொன்டல் உடன் மோதலில் ஈடுபட்டார்.

ரிப்பன் ஒரு சிக்ஸர் அடித்ததற்குப் பிறகு, நெட்டுலி கோபமடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைப் பிடித்துத் தள்ளினார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கைகளை வைத்துக் கொண்டனர். அதன் பிறகு நெட்டுலி, ரிப்பனின் ஹெல்மெட்டைப் பிடித்தார்.
இது போன்ற நிலையில், மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஓடி வந்து நெட்டுலியைத் தடுத்து நிறுத்துவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் அனைவரும் ரிப்பனின் அருகே வந்து அவரை மிரட்டினர். அவரை விலகிச் செல்லுமாறு அச்சுறுத்தினர்.
இந்த நிலையில், நடுவர்கள் இருவரும் ஓடி வந்து குத்துச்சண்டை போட்டியின் இடையே வீரர்களுக்கு இடையே நின்று தடுத்து நிறுத்துவது போல செயல்பட்டனர். இந்தக் காட்சிகள் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இரு அணி வீரர்களுக்கும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இந்தப் போட்டி மே 30 அன்று முடிவடைய உள்ளது. அதன் முடிவில் மேட்ச் ரெஃப்ரி இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கெட் அமைப்புக்கு அறிக்கை அளிப்பார் எனவும், அதன் முடிவில் இந்த மோதலில் ஈடுபட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் நெட்டுலி சில போட்டிகளுக்கு தடை செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.