மும்பை: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்ற வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்த தொடர் முடிவடைந்த உடன் மூன்று ஒரு நாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது t20 போட்டி டார்வின் நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, அந்த அணி 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில் நான்காவது வீரராக களத்தில் களமிறங்கிய சிஎஸ்கே வின் பிரவீஸ், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தார். 41 பந்துகளில் சதம் அடித்த அவர் 56 பந்துகளில் 125 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 8 சிக்ஸரும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 223 என்ற அளவில் இருக்கின்றது.
இதேபோன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து இருக்கின்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கேப்டன் மிட்செல் மார்ஸ் 13 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க டிராவிஸ் ஹெட், மீண்டும் ஒருமுறை சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இதுபோன்று கேமரான் கிரீன் 9 ரன்கள் எடுக்க, மேக்ஸ்வெல் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் மட்டும் தனியாளாக நின்று அதிரடி காட்டினார். 24 பந்துகளை எதிர்கொண்ட டிம் டேவிட் 50 ரன்கள் விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். எனினும் யாரும் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிக்காததால் ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் 165 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென்னாப்பிரிக்க தரப்பில் மாபாகா மூன்று விக்கெட்டுகளையும் கார்பின் போஸ் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. தொடரை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.