விராட் கோலி
தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் 12 ரன்களிலும், அகர்வால் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா ஒரு அளவுக்கு போராடி 43 ரன்கள் சேர்த்தார். வழக்கம் போல் ரஹானே சொற்ப ரன்களில் வெளியேற, தனி ஒருவனாக போராடிய விராட் கோலி 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்களும் கைக்கொடுக்காததால் இந்தியா 223 ரன்களுக்கு சுருண்டது.
பும்ரா அதிரடி
இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. கேப்டன் டீன் எல்கார், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பீட்டர்சன் மட்டும் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அவருக்கு கை கொடுக்க தவறினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரிஷப் பண்ட் சதம்
13 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. மீண்டும் தொடக்க வீரர்கள் ஏமாற்ற, இந்தியா பெரிதும் நம்பிய புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். விராட் கோலி போராடி 29 ரன்கள் மட்டுமே சேர்க்க, ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்திய அணி 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அபாரம்
'212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. மார்க்ரம் 16 ரன்களும், டீன் எல்கார் 30 ரன்களும் எடுக்க, சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 82 ரன்கள் எடுத்து இந்தியாவை ஆட்டத்தில் இருந்தே ஓரங்கட்டினார். இறுதியில் பெவுமா, வெண்டர் டுசன் ஜோடி நிதானமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்தியாவால் வெறும் 3 விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2க்கு1 என்ற கணக்கில் வென்றது. தென்னாப்பிரிக்க தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு பறிபோனது.