லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டனில் நேற்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹசிம் ஆம்லா, 115 பந்துகளில் 103 ரன்கள் விளாசி தனது 25வது சதத்தை பூர்த்திசெய்தார். 70 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார் டுப்ளசிஸ். இலங்கை அணி சார்பில் பிரதீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரசன்னா, லக்மல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.
இதையடுத்து 300 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டி களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. எனவே 96 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக டிக்வெல்லா 33 பந்துகளில் 41 ரன்களும், கேப்டன் தரங்கா 69 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர்.