டெல்லி : தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்து இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி.
2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையே ஆன போட்டி டெல்லியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்து வந்தது. துவக்க வீரர் டெம்பா பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - டஸ்ஸன் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இருவருமே சதம் அடித்தனர்.
டி காக் 84 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டஸ்ஸன் 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த எய்டன் மார்கிரம் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து மிரட்டினார். கிளாசன் 20 பந்துகளில் 32 ரன்களும், டேவிட் மில்லர் 21 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 428 ரன்கள் குவித்தது. இந்த இமாலய ரன் குவிப்பால் பல்வேறு சாதனைகளை உடைத்து எறிந்துள்ளது தென்னாப்பிரிக்கா. அதில் முக்கியமானது உலகக்கோப்பை வரலாற்றில் மிக அதிக ஸ்கோரை எடுத்து இருக்கிறது.
இதற்கு முன்பு ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோர் 417 ஆகும். ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 2015இல் இந்த ஸ்கோரை எடுத்தது. இந்த சாதனையை 8 ஆண்டுகள் கழித்து தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் குவித்து முறியடித்து இருக்கிறது.
மேலும், இதே பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் மூன்று இடங்களை பிடித்துள்ளது தென்னாப்பிரிக்கா. அதே போல, உலகக்கோப்பையில் மூன்று முறை 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது தென்னாப்பிரிக்கா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
அதே போல, ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த அணிகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதுவரை எட்டு முறை இதை செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா 6 முறையும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி 5 முறையும் செய்துள்ளன.
ஒருநாள் போட்டிகளில் இது தென்னாப்பிரிக்கா அணியின் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், இலங்கை அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.