தர்மசாலா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தி இருக்கிறது.
இதன் மூலம் டெஸ்ட் போட்டிகள் விளையாடாத நெதர்லாந்து அணியிடம் முதல் முறையாக டி20 மற்றும் ஒரு நாள் போட்டி உலக கோப்பையில் தோற்ற ஒரே அணி என்ற சோகமான சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்திருக்கிறது.

இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சில் 32 ரன்கள் Wide ஆகவும் லெக் பைஸ் ஆகவும் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பெவுமா, நாங்கள் பந்து வீசும் போது 112 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற நிலையில் நெதர்லாந்து அணி இருந்தது. ஆனால் அவர்களை 240 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டு இருக்கக் கூடாது.
நாங்கள் பல பந்துகளை தவற விட்டோம். பில்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. எனினும் இந்த இலக்கை நாங்கள் வெற்றிகரமாக துரத்துவோம் என நினைத்தோம். ஆனால் பேட்டிங்கில் எங்களிடம் இருந்த குறைபாடுகளை நெதர்லாந்து வீரர்கள் வெளிக்கொண்டு வந்து விட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.
ஆனால் இன்று தலைக்கீழ் மாறிவிட்டது. நாங்கள் பந்துவீச்சில் இவ்வளவு எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்திருக்கக் கூடாது. எங்களுடைய பீல்டிங்கும் தரக்குறைவாக தான் இருந்தது. ஆஸ்திரேலியாவிடம் நாங்கள் எவ்வளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோமோ அதனை இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெளிப்படுத்தவில்லை.
இது குறித்து நான் எங்கள் அணி வீரர்களிடம் நிச்சயமாக பேசுவேன். இந்த தோல்வியால் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. நிச்சயமாக இது காயத்தை கொடுக்கும். ஆனால் இந்த வலியை உணர்ந்து அடுத்த நாள் நாம் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருமே அலட்சியமாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன். இந்த ஒரு தோல்வியால் எங்களுடைய உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்து விடாது.
எனினும் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நெதர்லாந்து அணி சிறப்பாக விளையாடினார்கள். இந்த போட்டி முழுவதுமே எங்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். தொடர்ந்து அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன் என்று பெவுமா பாராட்டினார்.