டர்பன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒரு நாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி மயிரிழையில் தோல்வியில் இருந்து தப்பி பிழைத்தது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 334 ரன்களும், தென்னாப்பிரிக்கா 500 ரன்களும் எடுத்தன. 166 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சில் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 68 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் 154 ரன்னுக்குள் 7 விக்கெட் சரிந்த போது, ஜாகீர்கான் ரஹானேவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி என்ற அவமானகரமான நிலையை தவிர்த்தது. 41 பந்துகளை சமாளித்த ஜாகீர்கான் 3 ரன்னில், எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்வது நன்றாக தெரிந்தது. நடுவரின் மோசமான தீர்ப்பு இன்னொரு பின்னடைவாக அமைந்தது.
விக்கெட்டுகள் கைவசம் இல்லாததால் இறுதிகட்டத்தில் ரஹானே அதிரடியாக ஆடினார். 2 சிக்சர்களை பறக்க விட்டார். ஆனாலும் 4 ரன்னில் தனது முதல் சதத்தை தவற விட்ட ரஹானே 96 ரன்களில் கடைசி விக்கெட்டாக பிலாண்டரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். இந்திய அணி 86 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு 59 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்காவின் கேப்டன் சுமித்தும் பீட்டர்சனும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
தென்னாப்பிரிக்கா அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 1-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது. டெஸ்ட் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 8-வது முறையாகும்.
அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். தென்னாப்பிரிக்கா அணி கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை ஒரு போதும் வென்றதில்லை என்ற சோகத்துடன், இந்திய அணி தாயகம் திரும்புகிறது.