சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களில் ஆட்டம் இழந்து தங்களது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கின்றது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றனர்.
எனினும் தொடரை வென்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியே இல்லாத படி இங்கிலாந்து செய்துவிட்டது.
இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் சுக்ரீ கான்ராட், "இந்த தோல்வி குறித்து நாங்கள் எந்த ஒரு காரணமும் சொல்ல விரும்பவில்லை."

"இன்றைய நாளில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நீங்கள் உங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் உங்களுடைய குறைகள் வெளியே தெரிந்துவிடும். இதேபோல்தான் ஆஸ்திரேலியாவிலும் நடந்தது. தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்ற பிறகு மூன்றாவது ஒருநாள் போட்டியில் நாங்கள் 400 ரன்களுக்கு மேல் கொடுத்தோம்."
"இது போன்ற போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகின்றோம். இதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தோல்வி கொஞ்சம் அசிங்கமாக தான் இருக்கின்றது. ஒருவேளை தொடரை வென்று விட்டோம் என்ற மமதையில் எங்கள் அணி வீரர்கள் விளையாடிருக்கலாம். அடுத்ததாக டி20 தொடர் நடைபெறுகிறது. (செப் 10ஆம் தேதி) தற்போது எங்களுடைய கவனம் எல்லாம் அதில் தான் இருக்கின்றது."
"அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக நாங்கள் செயல்படுவோம். இந்த தொடரில் எங்களுக்கு பல நல்ல விஷயங்களும் நடந்து இருக்கின்றது. அனுபவம் இல்லாத வீரர்கள் பலர் இங்கிலாந்தில் கடந்த இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார்கள்" என்று தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் கான்ராட் கூறியுள்ளார்.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர், "சில நாட்களில் நாம் பந்து கீழேவே போட மனது ஒப்புக் கொள்ளாது. அது போல் ஒரு நாள் தான் இன்று என்று தெரிவித்துள்ளார். காயத்திலிருந்து விடுபட்டு தான் சிறப்பாக பந்து வீசி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும்" ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
இதேபோன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்த ஜேக்கப் போத்தல், "அணியில் தமக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை அளித்தது. நான் சதம் அடித்தவுடன் என்னுடைய உடல் மெய்சிலிர்த்தது. அது ஒரு ஸ்பெஷலான தருணம். என்னால் உண்மையில் நம்பவே முடியவில்லை. அந்த உணர்வு எனக்கு பிடித்திருக்கின்றது. அதற்கு நான் அடிமையாகி விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.