புலவாயோ: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) பட்டத்தை வென்ற பிறகு களமிறங்கிய முதல் போட்டியில், கேசவ் மஹராஜ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, குறைபாடற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

புலவாயோ, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் வரலாற்றில் 500 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த முதல் அணி என்ற உலக சாதனையைப் படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 418 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 369 ரன்களும் எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் என்ற சவால் மிகுந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே 1992-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதிலிருந்து, 125 போட்டிகளில் விளையாடி, 35 முறை நான்காவது இன்னிங்ஸில் பேட் செய்துள்ளது. ஆனால், எந்த அணியும் அவர்களுக்கு 500 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்ததில்லை.
இதற்கு முன், அவர்களுக்கு 400 ரன்களுக்கு மேல் எட்டு முறை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாதனை, 2003-ல் மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 418 ரன்களைத் துரத்தியதுதான். ஜிம்பாப்வே இந்த 537 ரன்களை எட்டினால், அது அவர்களின் அதிகபட்ச சேஸிங் மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் மிகப்பெரிய நான்காவது இன்னிங்ஸ் சேஸிங்காகவும் அமையும்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஜிம்பாப்வே அணி நான்காவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. அவர்களுக்கு வெற்றி பெற இன்னும் 505 ரன்கள் தேவை. கேப்டன் டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ரையன் ரிக்கெல்டன், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா போன்ற பல முக்கிய வீரர்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜிம்பாப்வே தனது வரலாற்றில் 14 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது, அவற்றில் ஆறு வெற்றிகள் நான்காவது இன்னிங்ஸில் துரத்திப் பெற்றவை. இந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சில்ஹெட்டில் 174 ரன்கள் துரத்தியதே அவர்களின் அதிகபட்ச சேஸிங்காகும்.
இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் இடையிலான 10வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடைபெற்ற ஒன்பது டெஸ்ட் போட்டிகளில், உலக டெஸ்ட் சாம்பியன்கள் தென் ஆப்பிரிக்கா எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஒரு போட்டி டிரா ஆனது. ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.