ஆன்டிகுவா: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், பேட்டிங்கிற்கு கடினமான பிட்சில், பவுலர்கள் ஆதிக்கத்தால், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது தென் ஆப்பிரிக்க அணி.
மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மே.இ.தீவுகளில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 3 முறை மோத வேண்டும்.

கயானாவில் நேற்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 189 ரன் மட்டுமே எடுத்தது. பிஹார்டியன் போராடி 62 ரன் எடுத்தார்.
ஸ்பின்னுக்குச் சாதகமாக இருந்த அந்த பிட்சை கணித்து, தாஹிர், பேங்கிஸோ, தாப்ரைஸ் ஷம்சி ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்த ஸ்கோரையும் வைத்து வென்றுவிடலாம் என்ற தைரியத்தோடு அடுத்து பந்து வீச களமிறங்கியது.
நினைத்ததை போலவே, ஆஸ்திரேலியா 34.2 ஓவர்களில் 142 ரன்களுக்குச் சுருண்டது. ரபடா 7 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெடுகளைச் சாய்த்தார்.
தாப்ரைஸ் ஷம்சிக்கு அது அறிமுக போட்டி என்றாலும் மிகவும் அபாயகரமான ஒரு பவுலர் இவர் என்பது நேற்று தெரியவந்தது. ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்தும் அச்சுறுத்தலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தியது. அவர் 8 ஓவர்களில் 36 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 72 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா 34.2 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் போனஸ் புள்ளியை சேர்த்து 5 புள்ளியுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளன.