இலங்கையை சுருட்டி வீசிய தெ. ஆ… மிரள வைத்த பவுலிங்… 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
செஞ்சுரியன்:இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. அந்த அணி 45.1 ஓவரில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக தொடக்கவீரரான குயிண்டன் டி காக் 70 பந்துகளில், ஒரு சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன 94 ரன்கள் எடுத்தார். கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 66 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர்.

220 ரன்கள் குவிப்பு
ஒரு கட்டத்தில் தென் ஆப்ரிக்கா 36 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்திருந்தது. எனவே, அந்த அணி 300 ரன்களை மிக எளிதாக கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

31 ரன்களில் 6 விக்கெட்டுகள்
ஆனால் அந்த அணி கடைசி 6 விக்கெட்களை வெறும் 31 ரன்களுக்குள் இழந்து அதிர்ச்சி அளித்தது. இலங்கை அணி தரப்பில் திஷாரா பெரேரா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதிர வைத்த பந்துவீச்சு
252 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி ரபாடா, நிகிடி, அன்ரிச் ஆகியோரது வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 32.2 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிவேகம்
ரபாடா தொடக்க ஓவர்களில் ஒரு முறை 151 கி.மீ. வேகத்தில் பந்து வீசி எதிரணியை அச்சுறுத்தினார். அதிகபட்சமாக ஓஷடா பெர்னாண்டோ 31, மெண்டிஸ் 24, திஷாரா பெரேரா 23 ரன்கள் சேர்த்தனர்.

ஆட்ட நாயகன் டி காக்
தென் ஆப்ரிக்கா தரப்பில் ரபாடா 3, லுங்கி நிகிடி, அன்ரிச், இம்ரன் தகிர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக குயிண்டன் டி காக் தேர்வானார்.

2க்கு 0 என்று முன்னிலை
113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 2க்கு 0 என்று முன்னிலையில் உள்ளது. 3வது ஆட்டம் வரும் 10-ம் தேதி டர்பனில் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications