சென்னை: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி அனுபவமில்லாத அனலிஸ்ட்டால் ஏற்பட்ட தோல்வியால், அனலிஸ்ட்டின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடையே விவாதம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் மிகச்சிறந்த ஆட்டத்தை ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறது ஆஃப்கானிஸ்தான் அணி. இலங்கை அணியின் அபார பந்துவீச்சுக்கு எதிராக 37.1 ஓவர்களில் 292 ரன்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்று போராடி 2 ரன்களில் தோல்வியடைந்துள்ளது ஆஃப்கானிஸ்தான். ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு, அந்த அணியின் அனலிஸ்ட்டே காரணமாக மாறியுள்ளார்.

37.1 ஓவர்களில் இலக்கை எட்ட வேண்டும் என்று மட்டுமே அனலிஸ்ட் கூறியிருந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் 38வது ஓவரில் முதல் பந்திலேயே இலக்கை எட்ட வேண்டும் என்று விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் அடுத்த 3 பந்துகளில் ஒரு சிக்சர் விளாசி இருந்தாலோ, அல்லது 38.1 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்திருந்தாலோ ஆஃப்கானிஸ்தான் அணியால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்க முடியும்.
இதனை அறியாமல் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியடைந்தனர். ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜானத்தான் ட்ராட் இருந்தும் அந்த அணி அறியாமல் அடைந்துள்ள தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் அனலிஸ்ட்டை ரசிகர்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் அனலிஸ்டான பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் போட்டியின் மூலமாக ஒரு அனுபவம் வாய்ந்த அனலிஸ்ட்டின் முக்கியத்துவம் அனைவருக்கும் புரிய வந்துள்ளது. ஒருவேளை அனுபவம் வாய்ந்த அனலிஸ்ட் இருந்திருந்தால், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 37.4 ஓவர்களில் 295 ரன்கள் எடுத்திருந்தால் கூட குவாலிஃபை ஆகியிருக்க முடியும் என்று முன்கூட்டியே அறிந்திருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக அனலிஸ்ட்களின் பணி திட்டமிடுவதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பிரச்சனை, எந்த பவுலர் என்ன மாதிரியான பந்துகளை வீசுவார் என்பதோடு மட்டுமல்லாமல், டிஎல்எஸ் விதிமுறைகளையும் அதன் கணக்குகளையும் பார்ப்பதும் அனலிஸ்ட்டின் பணி தான். இதுபோன்ற வாழ்வா சாவா போட்டிகளில் அனலிஸ்ட் பணியின் முக்கியத்துவம் ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.