ஜோகன்னஸ்பெர்க்: முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 141 ரன்கள்ல் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியுள்ளது.
3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி, மழைக்குரிய வானிலை மற்றும் இரவில் பனியின் தாக்கம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்காவின் டுமினி 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 41 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
பெரிதும் எதிர்பார்க்கபட்ட இந்தியாவின் ஷிகார் தவான் 12 ரன்கள், கோஹ்லி 31 ரன்கள், ரோஹித் ஷர்மா 18 ரன்களில் அவுட் ஆகினர். கேப்டன் டோனி 65 ரன்களை எடுத்திருந்தார். பின்வரிசை வீரர்கள் சொதப்பலாக விளையாடி அவுட் ஆனதால் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டது.