மும்பை : நியூசிலாந்து எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் மழையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த போட்டியில் 402 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ஒரு பக்கத்தில் ரன்களை சேர்த்தாலும் பாபர் அசாம் வழக்கம் போல் நிதானமாக விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

ஒருபுறம் பக்கர் ஜமான் தனி ஆளாக நின்று ரன்களை சேர்க்க பாபர் அசாம் 51 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்கள் சேர்த்தார். அப்போது மழை குறுக்கிட்டது. ஏற்கனவே பாபர் அசாமின்ஸ்ட்ரைக் ரேட் மற்றும் அதிரடியாக விளையாடுவதில்லை என்பது தொடர்பான பல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் 402 ரன்கள் எதிர்கொள்ளும் போது இவ்வளவு மெதுவாக விளையாடுவதா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் கிப்ஸ், யாராவது பாபர் அசாம் இடம் சொல்லுங்கள். அவர்கள் 400 ரன்களை சேசிங் செய்கிறார்கள் என்று கூறி கிண்டல் அடித்தார். இந்த கருத்து நியாயமாக இருந்தாலும் கூட பாபர் அசாம் இவ்வாறு விளையாடுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது டி எல் எஸ் விதிப்படி விக்கெட்டுகளை இழந்தால் மேலும் அதிக ரன்கள் அடிக்கும் வகையில் இலக்கு மாற்றி தரப்படும். இதன் காரணமாக பாபர் அசாம் ஒரு முனையில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்ள மறுமுனையில் பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக தான் பாபர் அசாம் ஒரு முனையில் பொறுப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டுகள் இழந்து விடக்கூடாது என்று விளையாடி இருக்கிறார்.
இதன் மூலம் மறுமுனையில் பக்கர் சமான் அதிரடியாக விளையாடி ரன்களையும் குவித்திருக்கிறார்கள். மேலும் இவ்வளவு பெரிய இலக்கை எதிர்கொள்ளும் போது ஒரு வீரர் நிலைத்து நின்று கடைசி வரை விளையாடுவது தான் சிறந்த செயலாகும். இதனால் இந்த விஷயத்தில் பாபர் அசாம் செய்தது தவறு இல்லை என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் வைக்கப்படுகிறது.