டெல்லி: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - பவுமா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பவுமா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டி காக் - வான்டர் டஸன் கூட்டணி இணைந்தது. இலங்கை அணியை இவர்கள் இருவரும் வெளுத்து வாங்கினார்கள்.

ஒவ்வொரு ஓவருக்கும் கட்டாய பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் வெளுத்து கட்டினர். விக்கெட் கொடுக்காமல் இருவரும் அரைசதம் கடக்க, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்றது. 25 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின் 28வதுய் ஓவரை வீசிய வெல்லாலகே பந்தில் மட்டும் 3 பவுண்டரியை விளாசினார் டி காக். இருவரின் பாட்ர்னர்ஷிப்பும் 200 ரன்களை கடக்க, டி காக் சதம் விளாசி ஆட்டமிழந்தார்.
இன்னொரு பக்கம் மார்க்ரம் களமிறங்கி அதிரடியாக விளையாட, வான்டர் டஸன் சதம் விளாசினார். ஆனால் சதம் விளாசிய பின் 108 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, கிளாஸன் - மார்க்ரம் இணை டி20 மோடில் இறங்கியது. கிளாஸன் சிக்சராக விளாச, மார்க்ரம் பவுண்டரியாக அடித்து அசத்தினார். ஒருவர் மாற்றி ஒருவர் அடிக்க என்று தென்னாப்பிரிக்கா அணி வெளுத்து கட்டியது. 34 பந்துகளில் அரைசதம் அடித்த மார்க்ரம், அடுத்த 15 பந்துகளில் சதத்தை எட்டினார்.
பின்னர் அவர் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இதனால் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. கடைசி நேரத்தில் வந்த மில்லர் - மார்கோ யான்சன் இருவரும் தங்கள் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ஒரே இன்னிங்ஸ் 3 வீரர்கள் சதமடிப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதிரானா 95 ரன்களை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.